சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.48 திருப்பாண்டிக்கொடுமுடி பண் - பழம்பஞ்சுரம் |
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
1 |
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
2 |
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளார்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉ[னை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
3 |
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
4 |
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
5 |
ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
6 |
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
7 |
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
8 |
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரே ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
|
9 |
கோணி யபிறை சூடியைக் கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |